Wednesday, December 15, 2021

லட்சம் ஆண்டுகள் வாழலாம்..எங்கே..?



800 கோடி மக்கள் நிலவில் 1,00,000 ஆண்டுகள் உயிர் வாழ முடியுமா?

மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. சந்திரனின் பாறைகளின் அடுக்கு, ரெகோலித் என்று அழைக்கப்படுகிறது. இது மனித உயிர்களைத் தக்கவைக்க போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வு நம்பப்பட வேண்டுமானால், சந்திரனின் மேற்பரப்பில் 8 பில்லியன் அல்லது 800 கோடி மக்களை சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு உயிருடன் வைத்திருக்க போதுமான ஆக்ஸிஜன் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நிலவில் ஆக்சிஜன் இருக்கு.. ஆனால் வாயு வடிவில் இல்லையா? அப்போ என்ன பயன்?

இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த ஆக்ஸிஜன் இன்னும் வாயு வடிவத்தில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை இந்த பாறைகளில் இருந்து நிலையான முறையில் பிரித்தெடுக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்திய கணிப்புப் படி, விண்கல் தகவல் அறிக்கை செயின்ட் லூயிஸ் வாஷிங்டன் பல்கலைக்கழக வலைத்தளத்தில் நிலவின் பறைப்படிவில் 41 முதல் 45 சதவீதம் வரை ஆக்சிஜன் உருவாக்க முடியும் என்று கூறுகிறது.

விஞ்ஞானிகளின் எலெக்ட்ரோலிஸிஸ் செயல்முறை திட்டம் இதற்குக் கைகொடுக்குமா?

Space.com இல் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கை, சந்திரனில் இருந்து பயன்படுத்தக்கூடிய ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்க, விஞ்ஞானிகள் எலெக்ட்ரோலிஸிஸ் (electrolysis) என்ற செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. பூமியில், உலோகங்களை அவற்றின் கனிம தாதுவிலிருந்து பிரித்தெடுக்க இந்த எலெக்ட்ரோலிஸிஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆக்ஸிஜன் ஒரு துணை தயாரிப்பு ஆகும். ஆனால், சந்திரனில், ஆக்ஸிஜன் தான் மனிதர்களுக்குத் தேவையான முக்கிய பொருளாக இருக்கும் மற்றும் உலோகம் ஒரு பயனுள்ள துணை தயாரிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிலவின் பாறையில் ஆக்சிஜனுடன் இன்னும் என்னென்ன தாது வகைகள் எல்லாம் காணப்படுகிறது?

சந்திரனின் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாகவும் ஆக்ஸிஜனின் தடயங்களை மட்டுமே கொண்டுள்ளது. இது பெரும்பாலும் ஹைட்ரஜன், நியான் மற்றும் ஆர்கான் ஆகியவற்றால் ஆனது. இருப்பினும், பூமியில் உள்ள பாறைகளைப் போலவே, சந்திரனில் உள்ள ரெகோலித் தாது வடிவத்தில் கலந்த ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. அங்கு, சிலிக்கா, அலுமினியம் மற்றும் இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆக்சைடுகள் போன்ற கனிமங்கள் கடினமான பாறை, தூசி, சரளை மற்றும் மேற்பரப்பை உள்ளடக்கிய கற்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் நிலவில் உயிர் வாழ இந்த முக்கிய மூலப்பொருள் கட்டாயம் தேவை

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை உரையாடல், சந்திரனின் ஆழமான ஹார்ட் ராக் பொருளில் உள்ள ஆக்சிஜனை பிரித்து எடுக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது. நிலவின் பறைப்படிவுகளில் காணப்படும் ஆக்சிஜன் நிச்சயமாக எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான முக்கிய மூலப்பொருளாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சில மதிப்பீடுகள் திட்டமிடப்பட்டுள்ள படி வந்தடையும் பச்சத்தில் இது சாத்தியமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் படி, நிலவில் எவ்வளவு போதுமான ஆக்சிஜன் இருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

800 கோடி மக்கள் 1,00,000 ஆண்டுகள் என்ற கணக்கு எப்படி சாத்தியம்?

அதன்படி, ரெகோலித்தின் சராசரி ஆழம் நிலவில் சுமார் 10 மீட்டர் என்று வைத்துக்கொள்ளலாம், அதிலிருந்து அனைத்து ஆக்ஸிஜனையும் ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுக்க முடியும் என்று நம்புகின்றனர். அப்படி, ரெகோலிதில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் முயற்சி வெற்றிபெற்றால், "சந்திரனின் மேற்பரப்பின் மேல் 10 மீட்டர் ஆழம் வரை இருக்கும் ரெகோலிதின் மூலம், பூமியில் உள்ள எட்டு பில்லியன் மக்களை நிலவில் ஆதரிக்கத் தேவையான, போதுமான ஆக்ஸிஜனை இது வழங்கும் என்றும், இது 800 கோடி மக்களை நிலவில் எங்கோ சுமார் 1,00,000 ஆண்டுகள் வரை உயிர் வாழ வைக்கும்." என்று கூறப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இது உண்மையில் நடக்குமா? ஆக்சிஜனை பிரிக்கும் திட்டம் ரெடியா?

இந்த ஆண்டு, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சர்வீசஸ், எலெக்ட்ரோலிஸிஸ் மூலம் ரெகோலிதில் இருந்து ஆக்ஸிஜன் வெளியீட்டை மேம்படுத்தக்கூடிய மூன்று சோதனை உலைகளில் தனது வேலையைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அணுஉலைகள் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நேரடியாக நிலவில் செயல்படும்படி அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரோலிஸிஸ் அணுஉலை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இன் சிட்டு வள பயன்பாட்டு (ISRU) பணியின் ஒரு பகுதியாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பாலியல் தொழிலாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..?

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

 பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணியை உடனடியாக துவக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவு பொருட்கள் வழங்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
 
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும்படி கடந்த 2011ம் ஆண்டிலேயே நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை.

நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இதில் அவர்கள் செய்யும் தொழிலை கருத்தில் கொள்ள கூடாது.  எனவே பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் மற்றும் ஆதார் அட்டை ஆகியவை வழங்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துவங்க வேண்டும்.  இந்த உத்தரவு மீதான நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 14, 2021

இராஜராஜ சோழன் வெற்றியை கண்டுபிடித்த அரசு மாணவி..!

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்குப் பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விடுமுறை நாட்களில் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருட்கள், காசுகளை ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்துவருகின்றனர். 

சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் சீனப்பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த            கு. முனீஸ்வரி என்ற மாணவி, முதலாம் இராஜராஜ சோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளைக் கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார். 

 இதுபற்றி இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே. ராஜகுரு கூறியதாவது, “வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் இராஜராஜ சோழன் வெற்றிகொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இவை முதலாம் இராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம்வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு, ஈழக்கருங்காசு எனப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்றும் செம்பால் ஆன ஈழக்கருங்காசுகள் ஆகும்.

             மாணவிகு. முனீஸ்வரி

இக்காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இக்காசில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறான். 

 ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை, சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளன.

 ஏற்கனவே இப்பள்ளி மாணவர்கள் பஞ்சந்தாங்கி, தாதனேந்தலில் சோழர்களின் ஈழக்காசுகள், பால்கரையில் டச்சுக்காரர்களின் துட்டு, திருப்புல்லாணியில் கச்சி வழங்கும் பெருமாள் எனும் பாண்டியர் காசு, ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளையும் கண்டெடுத்துள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Monday, December 13, 2021

கமலுக்கு மூ.ராஜேஸ்வரி பிரியா கடும் கண்டனம்..!

'' Do not mislead our children '' - M. Rajeswari Priya strongly condemns Kamal!

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெறும் பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தைச் சீரழிப்பதாக முன்னதாகவே பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். அதிலும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இது தொடர்பாக போராட்டங்களையும் நடத்தியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுபற்றி ராஜேஷ்பிரியா கூறியுள்ளதாவது, ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்கள் நேற்று பேசிய கருத்தை எதிர்த்து பல பெண்கள் எனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வருகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி என்று தொடர்ச்சியாக போராடி வருகிறேன்‌.

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் அவர்கள் "அப்பா மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது அருவருக்கதக்க விஷயம்" என்று பேசியுள்ளார் . இந்த கருத்து எத்தனை பெண்களை சென்றடைந்திருக்குமோ ...?

தயவுசெய்து எந்த பெண்ணும் இது போன்று கூலிக்கு மாரடிப்பவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காதீர்கள். இது போன்று பேசுவதனை நிறுத்தி கொள்ளுங்கள் கமல் சார்.

பெற்றோருக்கு என்னவிதமான பொறுப்புகள் உண்டு என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதனை நீங்கள் கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மேற்கத்திய கலாச்சாரத்தில் நீங்கள் இருக்கலாம்‌. உங்கள் நிகழ்ச்சியினை பார்க்கும் எங்கள் பிள்ளைகளை தவறாக வழி நடத்துவதை விட்டுவிடுங்கள். பிக் பாஸ் கேடு கெட்ட நிகழ்ச்சி ஒழிக்கப்பட வேண்டும். சின்னத்திரைக்கு தணிக்கை குழு வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Saturday, December 11, 2021

ஸ்ரீரங்கம் கோயிலில் நுழைய தடை..?


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் டிசம்பர் பத்தாம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோவிலைவிட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் பதிவில், "நான் என் தாய்வீடாக கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் . காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன்.

ஜாகிர் உசைன்

இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை" என்று கூறியிருந்தார்.

என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது, "மூன்று வயதிலிருந்து அந்தக் கோயிலுக்கு நான் சென்றுவருகிறேன். அதைப் போலவேதான் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் பெருமாளை சேவிப்பதற்காகப் போனேன்.

நம்பிள்ளை உட்கார்ந்து ஏடு சொன்ன இடத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் என்னைப் பார்த்து சத்தமிட்ட ஆரம்பித்தார். அங்கிருந்து ஆரம்பித்து ரங்க ரங்கா மண்டபம் வரையில் "வெளியே போடா" என்று சத்தம் போட்டார். இன்னொரு தடவை உள்ளே வந்தால் கொலை செய்துவிடுவேன் என்றார். அதனால் வேறு வழியில்லாமல் வெளியே வந்துவிட்டேன்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் ஜாகிர் ஹுசைன்.

பொதுவாக பெரிய இந்துக் கோவில்களில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் இந்து அல்லாதவர்கள் செல்ல முடியாது. "நான் இஸ்லாமிய பெற்றோருக்குத்தான் பிறந்தேன். என் பெரியப்பாவுக்கு குழந்தை இல்லை என்பதால் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டார்கள். என்னுடைய பெரியப்பா இந்து நாயுடு சமூகத்தை சேர்ந்த அலமேலு மங்கா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர் மிகப் பெரிய பெருமாள் பக்தர். அவரின் தாக்கத்தில் நான் பெருமாளை சேவிக்க ஆரம்பித்தேன்.

பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். பரத நாட்டியத்தில் நான் இந்துக் கதைகளைத்தானே ஆடுகிறேன். கோவில்களின் சன்னிதிக்கு முன்பாக இந்து அல்லாதவர்கள் உள்ளே செல்லக்கூடாது என போர்டு வைத்திருப்பது உண்மைதான். ஆனால், ஒருவர் இந்து நம்பிகைக்களுடன் இருக்கும்போது அவரைத் தடுப்பது எப்படி சரியாகும்? பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் வந்து நிற்க அந்த ரங்கராஜன் யார்?" என்கிறார் ஜாகிர் ஹுசைன்.

ஜாகீர் உசைன்

திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு சன்னிதி உண்டு. பெருமாளுக்கு லுங்கி கட்டி ரொட்டி நைவேத்தியம் செய்கிறார்கள். பெருமாளே இஸ்லாமியர்களை ஏற்கிறார், இவர்கள் ஏன் தடுக்கிறார்கள் என்கிறார் ஜாகிர். ஜேசுதாஸ் கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பன் கோவிலில் அவரது பாடல்கள் ஒலிக்காமல் இருக்கிறதா என்கிறார் அவர்.

இது குறித்து கேட்பதற்காக ரங்கராஜன் நரசிம்மனை பிபிசி தமிழ் அழைத்தபோது, "இதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கூறியதோடு, கடுமையான வார்த்தைகளில் ஏசினார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக பிபிசி கேட்டபோது, "இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறேன். விசாரணை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, ஒருவர் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று சொன்னால் அந்த நடவடிக்கையை கோவில் நிர்வாகம்தான் எடுக்க வேண்டும். யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

பரதநாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன், 1990களில் இருந்தே வைணவத் திருப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். இது தொடர்பாக அவர் மேற்கொண்ட பணிகளை சமூக வலைதளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர்.

கண்டித்துள்ள இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா

ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்கச் சென்ற நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் மோசமாக நடத்தப்பட்டது ஆழமாக பாதிக்கிறது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். துலுக்க நாச்சியாருக்கு சிறப்பிடம் தருவதன் மூலமாக சங்கம பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஸ்ரீரங்கம் என்பதை நாம் மறக்கவேண்டாம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.


மாரிதாஸ் கைது : எதிர்க்கும் சீமான்..!


மாரிதாஸ் - சீமான்
               மாரிதாஸ் - சீமான்

'இவ்வளவு நாள் மறைமுகமாக பாஜக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்தார் சீமான். அதனால்தான் அவரை பாஜக-வின் `பி டீம்’ என்றோம். ஆனால், கே.டி.ராகவன் விவகாரத்திலும் சரி, தற்போது மாரிதாஸ் விவகாரத்திலும் சரி வெளிப்படையாக ஆதரித்து தான் பாஜக-வின் ஆள்தான் என நிரூபிக்கிறார்.'

''மாரிதாஸ் கருத்து, கோட்பாடுகளில் முழுமையாக முரண்படுகிறேன். ஆனால், தம்பி மாரிதாஸின் கைதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக் கூடாது என்று மாரிதாஸ் சார்ந்திருக்கும் பாஜக சொல்வதையும் ஏற்க முடியாது. திமுக எடுக்கும் முடிவையும் ஆதரிக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகக் கைதுசெய்தால் நாங்கள் என்னதான் பேசுவது?'' 

என யூடியூபர் மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்திருப்பது மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழக பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் விவகாரத்திலும், `உலகத்தில் நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார்? என அவர் பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது மாரிதாஸ் கைது குறித்து அவர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையாகியிருக்கிறது.

மாரிதாஸ்
              மாரிதாஸ்

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க ஆதரவாளரான இவர் 'Maridhas Answers' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பா.ஜ.க ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துவருவதோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சித்தும் பதிவுகளை வெளியிடுவார். இவர் வெளியிடும் வீடியோக்கள் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கின்றன. 

கடந்த ஆண்டு, ஏப்ரல் 2-ம் தேதியன்று மாரிதாஸ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கொரோனா பரவலுக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரே காரணம் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரில், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மாரிதாஸ் மீது 292ஏ, 295ஏ, 505(2), 67பி ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக, அவர் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சர்ச்சையானது. தொடர்ந்து அவர்மீது, 153 A (சாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டிவிடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (சாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி, பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டிவிடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாநகரக் காவல்துறை அவரைக் கைதுசெய்திருக்கிறது.
சீமான்
                சீமான்

இந்த நிலையில், மாரிதாஸின் கைது குறித்து, ஒரு தனியார் ஊடகத்தில் சீமானிடம் கேள்வியெழுப்ப, அதற்கு சீமான் மேற்கண்டவாறு பதிலளித்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியிருக்கிறது. 'இவ்வளவு நாள் மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்தார் சீமான். அதனால்தான் சீமானை பா.ஜ.கவின் `பி டீம்’ என்றோம். ஆனால், கே.டி.ராகவன் விவகாரத்திலும் சரி, தற்போது மாரிதாஸ் விவகாரத்திலும் சரி வெளிப்படையாக ஆதரித்து, தான் பா.ஜ.க-வின் ஆள்தான் என நிரூபிக்கிறார்' என எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

''முதுகுளத்தூர் மணிகண்டன் சந்தேகத்துக்கு இடமாக உயிரிழந்ததில் தம்பி மாரிதாஸின் கருத்தை நானும் ஏற்கிறேன். நானும் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். இதுமட்டுமல்ல, மீனவர் ராஜ்கிரண் உயிரிழப்புக்கும் தமிழக முதல்வர் மெளனமாகத்தான் இருந்தார். அவர் எதிர்கட்சியாக இருக்கும்போது பேசிய பேச்சுக்கும், முதல்வராக மாறிய பின்பு பேசும் பேச்சுக்கும் நிறைய வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது.''
சீமான்

'' தி.மு.க சொல்கிற கருத்தைத்தான் அனைவரும் சொல்ல வேண்டும். மாற்றுக் கருத்தை முன்வைக்கவே கூடாது என்றால் நாங்கள் ஏன் தனியாகக் கட்சி நடத்த வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும், எங்கள் கட்சிக்கென்று ஒரு கருத்து, நிலைப்பாடு இருக்கிறது. அதை நாங்கள் சொல்லத்தான் செய்வோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஆளும் தரப்புக்கு எதிராகக் கருத்துச் சொன்னால், உடனே ஏதாவது ஒரு கட்சியின் `பி டீம்’ எனப் பட்டம் சூட்டிவிடுகின்றனர். எங்கள் அளவுக்கு தி.மு.க உள்ளிட்ட எந்தக் கட்சியும் பா.ஜ.க-வை அவ்வளவு வலுவாக எதிர்க்கவில்லை. புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம் என தி.மு.க அமைச்சர்தான் பேசுகிறாரே தவிர நாம் தமிழர் கட்சி பேசவில்லை. பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரம் கருத்துகள் எங்களுக்கும்தான் இருக்கின்றன.

கே.டி.ராகவன் - சீமான்
    கே.டி.ராகவன் - சீமான்

ஏதோ ஒரு விஷயத்தில் எங்களுடைய கருத்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால், நாங்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவானவர்கள் என்று அர்த்தம் கிடையாது. மாறாக, மனித உரிமைக்கு ஆதரவாகவும், கருத்துரிமைக்கு ஆதரவான கருத்தாகவும்தான் இதை நீங்கள் பார்க்க வேண்டும். மாரிதாஸின் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருந்தால் அதை நீங்கள் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். வலுவாக உங்கள் எதிர்க்குரலை முன்வைக்கலாம். மாறாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுவதைப்போல தமிழகத்திலும் செயல்படக் கூடாது. ஒரு அதிகாரமிக்க அரசாங்கத்துக்கு எதிராக ஒரு டியூபர் கலவரத்தை உண்டாக்கிவிட முடியுமா சொல்லுங்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் யார், யாரைக் கைதுசெய்ய வேண்டும் என ஏற்கெனவே பட்டியல் தயார்செய்து வைத்திருக்கின்றனர். அவர்கள் ஏதாவது பேசியதும், உடனே அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கைதுசெய்துவிடுகிறார்கள்.

“வானூர்தி விபத்துக்கு திமுக-வையும் தமிழகத்தையும் இழுப்பது தவறு. இங்கு வானூர்தியை திமுக-வா வாங்குகிறது? மாரிதாஸ் ஆதரவு கட்சிதான் வாங்குகிறது. இவர்கள் செய்யும் ஊழலுக்காக தரமற்ற வானூர்திகளை வாங்குகிறார்கள். இந்தப் பிரச்னையில் எனக்கு வெறுப்புதான் வருகிறது. ஒரு வானூர்தியைக்கூடவா தயாரிக்க முடியாத விஞ்ஞான அறிவில் இருக்கிறோம்... என்னடா கொடுமை... வெளிநாட்டில் வாங்கினோம் என்கிறார்கள். எந்த நாடு நமக்கு உண்மையாக விற்கும்?''
சீமான்
இப்போது மட்டுமல்ல, ராகவன் விஷயத்திலும்கூட அண்ணன் அவரை ஆதரித்து எதுவும் பேசவில்லை. 'ஊரில் நடக்காத விஷயமா, அதையே எத்தனை நாள்கள் பேசிக்கொண்டிருப்பீர்கள்? வேறு முக்கியமான விஷயங்களைப் பேசுங்கள்' என்றுதான் கேட்டார். உடனே, ராகவனுக்கு ஆதரவாகப் பேசுகிறார் சீமான் என கதைகட்டிவிட்டார்கள். தற்போது மாரிதாஸுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என கதைகட்டிவிடுகிறார்கள். நாங்கள் மாரிதாஸை, மாரிதாஸின் அனைத்துக் கருத்துகளையும் ஆதரிக்கவில்லை. அவரின் கைதைக் கண்டிக்கிறோம். அவ்வளவுதான்'' என்கிறார்கள்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
             கான்ஸ்டன்டைன்                     ரவீந்திரன்

திமுக மீதான குற்றச்சாடுகள் குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

''இந்த அரசு மீது விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு நான் பதில் சொல்வதைவிட, 'ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதைவிட முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார்' என உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி மிகத் தெளிவாக பதில் சொல்லிவிட்டார். கருத்துக்கும் அவதூறுக்கும் வித்தியாசம் தெரியாமல் நாம் தமிழர் கட்சியினர் பேசிவருகின்றனர். ஒரு கருத்து என்றால் அதில் அடிப்படையான உண்மை இருக்க வேண்டும். மாரிதாஸ் தற்போது செய்திருப்பது அப்பட்டமான அவதூறு. அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த அரசியலும் இல்லை. பட்டியல் போட்டு கைதுசெய்கிற அளவுக்கு இவர்கள் அவ்வளவு பெரிய ஆட்களும் இல்லை. இவர்களின் கருத்துகள் மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த அரசு கருத்துரிமைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். அதேவேளையில், அவதூறு செய்பவர்கள்மீது தக்க நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். தமிழக மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்'' என்கிறார் அவர்.

Friday, December 10, 2021

அசத்தும் ஆண்டி இன்டியன்..!

ரிலீசாகி சர்ச்சைக்குள்ளாகும் படங்கள் உண்டு ரிலீஸ் ஆகும் முன்பே சர்ச்சையையும் எதிர்ப்பையும் கண்ட ஆன்டி இண்டியன் படம் , சென்சார் போர்டையும் ரிவைசிங் கமிட்டியையும் எதிர்கொண்டு , நீதிமன்றத்தை நாடி ஒரு கட் கூட இல்லாமல் முழுமையாக சான்றிதழ் பெற்று ரிலீஸாகிறது ஆதம்பாவா தயாரிப்பில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ப்ளூ சட்டை இளமாறன்.

 ஐ டியூப் சானல் நடத்தி தமிழ்ச் சினிமாக்களை உண்டு இல்லை என பிய்த்து மேய்ந்தவர் மாறன், இதனாலேயே அவரை ஆன்டி இண்டியன் என கோலிவுட்டும் , சோசியல் மீடியாக்களும் வர்ணித்தன “ எல்லா சினிமாக்களையும் விமர்சனம் செய்கிற நீ ஒரு சினிமா எடுத்துக் காட்டு " என சவால் விட்டனர் சவாலை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் , ஆன்டி இண்டியன் ' பெயரிலேயே ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறார் மாறன் . 

அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் எழுதும் ஓவியர் பாஷா கொல்லப்படுகிறார். அவரது தந்தை இஸ்லாமியர், தாய் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். இந்த கொலைக்கு யார் காரணம் என போலீஸ் ஒரு பக்கம் புலனாய்வு செய்து வருகிறது மற்றொரு பக்கம் பாஷாவின் உடலை அடக்கம் செய்வதில் முஸ் லிம் , இந்து , கிருஸ் தவம் ஆகிய 3 மதங்களும் உள்ளே நுழைய, அதனால் உருவாகும் அரசியல் மூன்று மதங்களையும் தனக்கேயுரிய வசனங்களால் கடுமையாகத் தாக்குதிறார் இயக்குனர் மாறன் அதில் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளவில்லை.

சென்னை கடலோர குப்பங்களின் எளிமையான உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை , படத்திற்கு பலம் சென்னை பாவையின் அடிநாதமாக புழங்கும் அந்த வார்த்தை, படம் நெடுக அனாயசமாக உச்சரிக்கப்படுவது எதார்த்தம். வாழும்போது எந்த சூழலிலும் மனிதர்களுக்கு உதவாத மதங்களையும் , இறந்த பிறகு அந்த உடல்மீது உருவாகும் மத உரிமைகளையும் அதனூடாக மெல்ல மெல்ல விரிவடையும் அரசியலையும் அம்பலப்படுத்துவதில் இயக்குநரின் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது . ஸ்ரீராமஜெயம் என பொறிக்கப்பட்ட காவிநிற துண்டு அணிந்து இந்து மதத்தின் தலைவராக வலம் வருபவருக்கு ராஜா என பெயரிட்டிருப்பதும் , அவர் செய்வதாக காட்டப்படும் காட்சிகளும் இந்து மதவாதிகளை கொந்தளிக்க வைக்கும். 

அதேபோல , இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆலோசனை , இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் ஆவேசம் , கிறிஸ்தவ மதத் தலைவரின் வசனங்கள் ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடியவை . சூப்பர் ஸ்டார் ரஜினியை நினைவுபடுத்தும் விதமாக , நடிகர் கபாலி என குறிப்பிட்டு நக்கலடிக்கும் வசனங்கள் ரஜினி ரசிகர்களை வம்புக்கு இழுக்க வைக்கும் . முதலமைச்சராக வரும் ராதாரவிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடைத்தேர்தல் வெற்றி அவசியமாக இருக்கிறது . அதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தனித்தனியாக திட்டம் வகுக்கின்றன 

குறிப்பாக உளவுத்துறையிடமும் காவல் துறையிடமும் ராதாரவி விவாதிக்கிறபோது , பாஷாவின் உடல் அடக்கத்தில் உருவாகிய மதப் பிரச்சனைகளை வைத்து போலீஸ் போட்டுக் கொடுக்கும் திட்டம் அதனால் உருவாகும் கலவரம் ஆகியவை தற்கால அரசியலோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. அரசாங்கமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை  அப்பட்டமாக சொல்லியிருப்பது அரசு இயந்திரத்தின் மீதான சவுக்கடி ! 

மதவாதிகளை விமர்சிக்கும் கருப்புச் சட்டை இளைஞர், இறப்பு வீட்டில் பந்தல் போடும் இளைஞர் , கானா பாடும் இளைஞர்கள் , போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் என சின்னச் சின்ன கேரக்டர்களாக இருந்தாலும் அசால்ட்டாக அவர்கள் பேசும் வசனங்கள் அதிரடி ! மதவாதிகள் , அரசியவாதிகள் , காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அரசியலை கடுமையாக விமர்சிப்பதில் இயக்குநர் இளமாறனின் நோக்கம் ஜெயித்திருக்கிறது . " ஒரு உடலை அடக்கம் செய்வதற்காக 13 பேரை கொன்றிருக்கிறீர்களே , அந்த 13 உடலை அடக்கம் செய்ய எத்தனை உயிர்கள் காவு கேட்கப் போகிறதோ ? " என க்ளைமாக்ஸில் கதறும் ' பசி ' சத்யாவின் அலறல் , மத அரசியலின் கோரமுகம். சவத்தின் வழியே சமகால மதவாத அரசியலை சமரசமின்றி அம்பலப்படுத்தி உள்ளார் புளு சட்டை இளமாறன்.

Thursday, December 9, 2021

விமானத்தின் கறுப்புப் பெட்டி என்பது என்ன..?


ஒரு விமானம் விபத்திற்கு உள்ளாகும் போது, விபத்திற்கான காரணங்களைத் தெளிவாகவும், முழுமையாகவும் அறிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுவது விமானத்தின் கறுப்புப் பெட்டி ( Black Box) ஆகும். ஒரு விமான விபத்து எப்படி நடந்தது என்பதை, அதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் கூறுவதைவிட, கறுப்புப் பெட்டி தெளிவாக வரையறுத்துக் கூறிவிடும்.

கறுப்புப் பெட்டி என்பது விமான விபத்துக்கள் மற்றும் விமானத்தில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வசதியாக, ஒரு விமானத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு பதிவு சாதனங்களின் தொகுப்பு ஆகும்.

     Flight Accident
Jonathan Borba on Unsplash

கறுப்புப் பெட்டியின் அமைப்பும் - செயல்பாடும்:

கண்டுபிடிப்பு:

டேவிட் வாரன் என்னும் ஆஸ்திரேலிய அறிவியல் அறிஞர் 1953 இல் உலகின் முதல் கறுப்புப் பெட்டி விமான ரெக்கார்டரைக் கண்டுபிடித்தார். வாரனின் தந்தை ஹூபர்ட் வாரன் 1934 ஆம் ஆண்டில் பாஸ் ஸ்ட்ரெய்ட் விமான விபத்தில் இறந்தார்.அந்த விமான விபத்திற்கான காரணத்தை இறுதிவரை யாராலும் கண்டறிய இயலவில்லை. இந்நிகழ்வே வாரன் கறுப்புப் பெட்டியைக் கண்டறியத் தூண்டுகோலாக அமைந்தது.

டேவிட் வாரன் ஏ.ஆர்.எல் விமான நினைவக அலகு (ARL Flight Memory Unit) என்ற பெயரில் தயாரித்த கருவியே முதல் விமான கறுப்புப் பெட்டி ரெக்கார்டர் ஆகும்.

கருவிகள்:

கறுப்புப் பெட்டியில் இரண்டு விதமான கருவிகள் இருக்கும்.

1) டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர்.

(Digital Flight Data Recorder - DFDR or FDR)

2) காக்பிட் குரல் ரெக்கார்டர்.

(Cockpit Voice Recorder - CVR)

DFDR என்பது விமானத்தின் உயரம், செங்குத்து முடுக்கம், எரிபொருள் ஓட்டம் மற்றும் வானியல் உள்ளிட்ட விமானம் குறித்த அனைத்து தரவுகளையும் பதிவு செய்யும்.

CVR என்பது காக்பிட்டில் நடக்கும் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் காக்பிட்டில் ஏற்படக்கூடிய அனைத்து வித ஒலிகளையும் முழுமையாகப் பதிவு செய்யும்.

இந்த இரு கருவிகளும் ஒரே அலகாக இணைந்திருக்கும்.

கறுப்புப் பெட்டியின் ஆரம்ப நாள்களில் தகவல்கள் ஒரு உலோக துண்டுக்குள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவை காந்த இயக்கிகளைக் கொண்ட திடநிலை நினைவக சிப்களாக தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.


வலிமை:

கறுப்புப் பெட்டிகள் 3,400 GS (ஈர்ப்பு விசையின் 3,400 மடங்கு) முடுக்கம் தாங்கக் கூடியவையாக இருக்கும். மேலும், இவை சுமார் 310 மைல் அளவிலான தாக்குதல் வேகத்தைச் சமப்படுத்துவதாக இருக்கும்.

கறுப்புப் பெட்டிகள் பொதுவாக டைட்டானியம் அல்லது எஃகு மூலம் இரட்டை அடுக்காக உருவாக்கப்பட்டிருக்கும். மேலும், இவை கடினமான மற்றும் அசாதாரண நிலைமைகளைத் தாங்கக்கூடியவையாக இருக்கும்.

கறுப்புப் பெட்டியின் மெமரி போர்டுகளைக் கொண்ட முக்கியமான பகுதி CSMU (Crash-Survivable Memory Unit) விமான பீரங்கியில் இருந்து சுடப்பட்டும், பல்வேறு முறைகளில் நசுக்கப்பட்டும் அதனுடைய கடினத்தன்மை உருவாக்கவும், சோதிக்கவும் செய்யப்படும்.

விபத்தின்போது விமானத்தின் வால்பகுதியில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதால், கறுப்புப் பெட்டிகள் வழக்கமாக ஒரு விமானத்தின் வால் பகுதியில் வைக்கப்படுகின்றன.

அதீத நெருப்பு, உப்புநீர், உயர் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து விதமான அசாதாரண சூழ்நிலைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு கறுப்புப் பெட்டிகள் வடிவமைக்கப்படும். இவை கடலுக்குள் மூழ்கினாலும் பழுதடையாது. ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது. எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கும். எந்தவித வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும், தகவல் சேமிப்பு யூனிட்டும் வலிமையானதாக இருக்கும். எனவே, ஒரு கறுப்புப் பெட்டி அழிக்கப்படுவது என்பது மிகமிக அரிதானது. கிட்டத்தட்ட முடியாதது.


Black box

நிறம் மற்றும் வடிவம்:

கறுப்புப் பெட்டிகள் கருப்பு நிறமாக இருக்காது. ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த ஆரஞ்சு விண்வெளி மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் மூன்று வண்ணங்களின் தொகுப்பு நிறமாகும்.

இந்நிறம் சர்வதேச ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. விமான விபத்துகளின்போது சுலபமாகக் கண்டறிய வேண்டியே ஆரஞ்சு நிறத்தில் கறுப்புப் பெட்டியானது வடிவமைக்கப்படுகிறது. நம்மில் பலரும் நினைப்பதுபோல கறுப்புப் பெட்டி என்பது பெட்டி அல்ல. பார்ப்பதற்கு கம்ப்ரஸர் போன்று இருக்கும்.அதனுள்ளே உருளை வடிவிலான இரண்டு பகுதிகள் வைக்கப்பட்டிருக்கும்.

ஊடகங்கள் வைத்த பெயர்:

கறுப்புப் பெட்டி என்ற சொல்லை அறிஞர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. விபத்தை ஆராய்ச்சி செய்யும் புலனாய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் Flight Recorder, DFDR மற்றும் CVR உள்ளிட்ட பதங்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், கறுப்புப் பெட்டி என்னும் பெயர் ஊடகங்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

விமான தரவு பதிவு கருவிகள் கறுப்புப் பெட்டி என்னும் பெயர் பெற்றமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளின் (பிரிட்டன்) விமானப் படையில், எதிரி நாடுகளை ஊடுருவக்கூடிய பல்வேறு சாதனங்கள் விமானத்தின் கறுப்பு நிறத்தில் இருந்த பெட்டிகளில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டன. எனவே, இவை கறுப்புப் பெட்டி என வழங்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

கறுப்புப் பெட்டியில் உள்ள விபரங்கள் விபத்துக்குப் பிறகுதான் ஆய்வு செய்யப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்தில் கறுப்பு நிறம் என்பது இறப்புகளுடன் தொடர்புடையது. எனவே, மனிதர்களின் மரணத்துடன் தொடர்புடைய விபரங்களைக் கொண்டது என்பதால் கறுப்புப் பெட்டி என்ற பெயர் வழங்கப்பட்டு இருக்கலாம் என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது.

கறுப்புப் பெட்டியின் ஆரம்பகாலங்களில், விமான விபத்துக்குப் பிறகு உண்டாகிய நெருப்பில் அது கறுப்பு நிறமாக மாறியிருக்க வாய்ப்புண்டு என்ற காரணத்தால் இவை கறுப்புப் பெட்டிகள் என வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும், விமானம் குறித்த சிக்கலான மற்றும் ரகசியமான தரவுகள் உள்ள சாதனம் என்பதால் இவை கறுப்புப் பெட்டிகள் என ஊடகங்களால் முதலில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் கறுப்புப் பெட்டி என்ற பெயருக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

எது எப்படி இருப்பினும் இந்த விமான விபத்துப் பதிவு கருவிகளுக்கு கறுப்புப்பெட்டி (Black Box) என்று பெயரிட்ட பெருமை உலகலாவிய ஊடகங்களையே சாரும்!

தரவுகள் பதியப்படும் நேரம்:

கறுப்புப் பெட்டியில் இருக்கும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர்கள் (DFDR) 25 மணிநேர விமானத் தரவுகளுக்கு போதுமான சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளன. ஆனால், CVR களில் 2 மணிநேர காக்பிட் உரையாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.

தொடர்ந்து இரண்டு மணிநேர காக்பிட் குரல் பதிவுகள் மட்டுமே ஒரு சுழற்சியில் பதிவு செய்யப்படுகின்றன. CVR-கள் காக்பிட்டில் விமானிகளின் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து சத்தங்களின் சமீபத்திய வரலாறுகளைப் பதிவு செய்யும் என்பதால், பின்னணி சத்தங்களும், இரைச்சல்களும் புலனாய்வாளர்களுக்கு முக்கிய தடயங்களை அளிக்கக்கூடும்.

கறுப்புப் பெட்டிகளின் முந்தைய காந்தநாடா பதிப்புகளில் 30 நிமிட காக்பிட் உரையாடல்கள் மற்றும் சத்தத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்.


கால அளவு மற்றும் கண்டுபிடிக்கும் முறை:

கறுப்புப் பெட்டிகள் அவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பதற்கு வசதியாக 30 நாள்களுக்கு அல்ட்ராசவுண்ட் சிக்னல்களை அனுப்பும். கறுப்புப் பெட்டி அழிக்க முடியாத ஒன்று என்பதால், இவை நிலத்தில் விழும்போது சுலபமாகக் கண்டறியப்பட்டு விடும்.

கறுப்புப் பெட்டிகள் தண்ணீரில் 20 ஆண்டுகள் வரை அழியாமல் நீடிக்கும். ஆனால், அதன் ULB-யில் (Underwater Locator Beacon) உள்ள பேட்டரி சுமார் 30 நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும். எனவே, 30 நாள்களுக்குப் பிறகு கடல் படுகையிலிருந்து கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிப்பது கடினம்.

ஒரு கறுப்புப் பெட்டிகளில் நீருக்கடியில் லொக்கேட்டர் வழிகாட்டி பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. அதன் சென்சார் தண்ணீரைத் தொட்டால் ஒரு துடிப்பை வெளியேற்றத் தொடங்குகிறது. இவை 4 கிலோமீட்டர் ஆழம்வரை வேலை செய்கின்றன. இவற்றின் பேட்டரி தீர்வதற்கு முன் 30 நாள்களுக்கு,ஒரு வினாடிக்கு ஒரு முறை சமிக்கை வெளியிட முடியும். கறுப்புப் பெட்டிகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய பொதுவாகக் குறைந்தது 10-15 நாள்கள் ஆகும்.

விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ATC (Air Traffic Control) மற்றும் விமானிகளுக்கு இடையிலான உரையாடல்களின் பதிவுகள், விபத்து நிகழப்போவதை விமானிகள் அறிந்திருந்தார்களா, விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்களை விமானிகள் தெரிவித்திருக்கிறார்களா போன்ற பல்வேறு வினாக்களுக்கான விடைகளை CVR மூலம் புலனாய்வுக் குழு புரிந்துகொள்ள முயலும்.

மேலும், விமானம் குறித்த முழுமையான பல்வேறு தரவுகள்,விபத்திற்கான சூழ்நிலை,விமானம் தரையில் மோதிய வேகம் உள்ளிட்டவற்றை குளித்த பல்வேறு தடயங்களை DFDR மூலம் புலனாய்வாளர்கள் தேடுவார்கள். மேலும், விமான நிலையத்தில் உள்ள விமானத்தின் முந்தைய தரவுகள் மற்றும் காலநிலை சார்ந்த பல்வேறு தரவு ரெக்கார்டர்களை ஆராய்ந்து விபத்திற்கான காரணங்களையும், வருங்காலங்களில் விபத்துகள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விபத்தை ஆய்வு செய்யும் புலனாய்வாளர்கள் பரிந்துரைப்பார்கள்.

கறுப்புப் பெட்டிகள் என்னும் விமான தரவுப் பதிவு கருவிகள் விபத்து நடந்ததற்கான காரணங்களை நமக்குத் துல்லியமாக வழங்குவதுடன்,எதிர்காலத்தில் விபத்துகள் நடைபெறாமல் இருக்கவும் துணைபுரிகின்றன. விமானங்களின் தேவையும், எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், கறுப்புப் பெட்டிகளின் தொழில்நுட்பமும் திறனும் வருங்காலங்களில் மேலும் மேம்பட வாய்ப்புண்டு!


Wednesday, December 8, 2021

அதிக வறுமையில் புதுக்கோட்டை..!


வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.. மாவட்ட ரீதியாக பார்க்கும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் வறுமை அதிகரித்துள்ளதாக புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

2015-ல் மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை ஏற்படுத்தியது மத்திய பாஜக அரசு.. வறுமைக்கோடு என்பதை வெறும் உணவு என்ற விஷயத்தை கொண்டே இத்தனை காலமும் பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பாஜக அரசு இதற்கான கண்ணோட்டத்தை மாற்றியது..

அதன் ஆய்வை விரிவுபடுத்தியது.. விரிவுபடுத்தியது அறிக்கையாக சமர்க்கிறது.. அதாவது, உணவு மட்டுமல்லாமல், கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு விகிதம், மக்களின் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களை கொண்டு இந்த அறிக்கை தயாராகிறது..


இந்த அறிக்கையை வெளியிடுவதன்மூலம் அதிகமான ஏழைகள் கொண்ட மாநிலங்கள் எது? வறுமை ஒழிப்பில் முதன்மை பெறும் அல்லது பின்தங்கிய மாநிலங்கள் எவை என்பதையும் எளிதாக மக்களால் தெரிந்து கொள்ள முடிகிறது.. இது வறுமையை ஒழிக்கும் முயற்சிக்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கு அடித்தளமாகி வருகின்றன.. அப்படித்தான், கடந்த மாதம் கூட ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

வறுமை

அதில், இந்தியாவில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதலிடத்தை பிடித்திருந்தது.. ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றிருந்தன... வறுமை குறைந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது... கேரளாவின் மக்கள் தொகையில் 0.71 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது முக்கிய கவனத்தை அப்போது ஈர்த்தது.

.கேரளா

இதற்கான காரணங்களும் சோஷியல் மீடியாவில் அப்போது விவாதிக்கப்பட்டன.. இம்மாநிலத்தின் வறுமை ஒழிப்புக்கு பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, கேரளாவில் அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்து வரும் எல்லா அரசுகளுமே வறுமையை போக்குவதற்குதான் முன்னுரிமை தந்து வருவதும் மிக முக்கியமான காரணமாக ஈர்க்கப்பட்டது. இப்போதும் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.. அந்த லிஸ்ட்டில் வழக்கம்போல் கேரளா முன்னிலை வகித்தாலும், தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் அசத்தி உள்ளது.

பட்டியல்

அதிகமான ஏழைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 4 இடங்களை பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.. அதேபோல குறைவான ஏழைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவை இடம்பெற்றுள்ளன... இதில், வறுமை குறைவாக இருக்கும் மிகப்பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது..

மாவட்டங்கள்

மாநில வாரியாக தரப்பட்டுள்ள வறுமை குறீயீட்டில், மிக குறைந்த அளவு கேரளா 0.71 சதவீதமும், தமிழ்நாடு 4.89 சதவீதமும், இடம்பித்துள்ளன.. அடுத்து உபி 37.79, பீகார் 51.91, உபி 37.79 சதவீதமாக உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மாவட்ட வாரியாகவும் தரப்பட்டுள்ளன.. அதில், தமிழ்நாட்டிலேயே வறுமை குறைந்த மாவட்டங்களின் லிஸ்ட்டில் நீலகிரி முதலிடத்தை பெற்றுள்ளது.. அடுத்து கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

குஜராத்

அதேபோல, வறுமை அதிகமான மாவட்டங்களின் லிஸ்ட்டில் நாகப்பட்டினம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் போன்றவை இடம்பெற்றுள்ளன... இதில் அதிக கவனத்தை ஈர்த்து வருவது புதுக்கோட்டைதான்.. 11.71 சதவிகிதத்துடன் அதிக வறுமையான மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது.. எனினும் இந்த சதவீத அளவை வாரணாசி முந்தி கொண்டுவிட்டது.. 26.03 சதவிகிதத்துடன் அதிக வறுமையான மாவட்டமாக வாரணாசி உள்ளதாம். இதில், ஏழைகளே இல்லாத மாவட்டத்தில் கேரளாவின் கோட்டயம் இடம்பெற்றுள்ளது.. பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் 18 சதவிகித மக்கள் ஏழைகளாக உள்ளனராம்.

தேர்தல்தேர்தல்

இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், தென் மாநிலங்களில் வறுமை குறைந்து காணப்படுகிறது.. வடமாநிலங்களோ, வறுமை வாட்டி கொண்டிருப்பதும், மக்கள் ஏழ்மையில் உழன்று வருவதும் புலனாகிறது... விரைவில் எம்பி தேர்தலுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் தற்போது மும்முரமாகி வரும் நிலையில், இந்த வறுமை கணக்கு மீண்டும் ஒரு விவாதத்தை களத்தில் கிளப்பி விட்டுள்ளது.