Sunday, August 29, 2021

சாதம் சாப்பிட்டாலே மதியம் தூக்கம் வருதற்கு காரணம் என்ன..?

புள்ளிவிவரங்களின்படி, அரிசி என்பது உலகெங்கிலும் உள்ள 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருளாகும். எளிமையான முறையில் சமைக்க முடிந்தாலும் அதை உண்ட பின் உண்டாகும் சோம்பல் மற்றும் மயக்கத்தை விவரிக்கவே முடியாது. நல்ல மெத்தை தலையணை கிடைத்தால் சொர்கமே சென்று வரலாம். ஆனால் அவ்வாறு செய்தால் நம்முடைய அன்றைய நாளே பாழாகிவிடும். குறிப்பாக மதியவேளையில் பரபரப்பாக இருக்கும் சமத்தில் அரிசி உணவு உட்கொள்வது சரியானதாக இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏன் தெரியுமா..?

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். அதில் இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்தி பேசியிருந்தார். அதன் பின்னால் உள்ள அறிவியலை விவரமாக பேசி அந்த வீடியோவை வெளியிட்டார். அதோடு அதை சமாளிக்க சில ஸ்மார்ட் வழிகளையும் பரிந்துரைத்தார்.

அதில், ”அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே நீங்கள் கார்போஹைட்ரேட்டுகளை உண்ணும்போதெல்லாம் அவை குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. மேலும் குளுக்கோஸுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. அப்போது, இன்சுலின் அதிகரித்தவுடன், ட்ரிப்டோபன் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நுழைய மூளையைத் தூண்டுகிறது. இது மெலடோனின் மற்றும் செரோடோனின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. எனவே தூக்கத்தை ஏற்படுத்தும் அமைதியான ஹார்மோன்களான மெலடோனின் மற்றும் செரோடோனி-ஐ தூண்டுவதாலேயே உங்களுக்கு தூக்கம் வருகிறது “ என கூறியுள்ளார். அவ்வாறு உடல் இயக்க நிலையிலிருந்து மந்தமான நிலைக்கு அதாவது ஓய்வு நிலைக்கு தள்ளுகிறது. அப்போது உடல் செரிமான வேலைகளை செய்யத் துவங்குகிறது.

பூஜை இதை சமாளிக்கும் வழிகளையும் அதில் கூறியுள்ளார். அதில், “ மதியம் சாப்பிட்டதும் வரும் தூக்கத்தை தவிர்க்க உணவின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். இதுதான் எளிதான வழி” என்று கூறுகிறார். "அதிக அளவில் உணவு உட்கொள்ளும்போது, அதற்கு அதிக செரிமான நேரம் தேவைப்படும். இதனால் மெலடோனின் மற்றும் செரோடோனி சுரப்பை கூடுதலாக சுரக்கும். எனவே அது சோர்வு மற்றும் தூக்கத்தை ஏற்படுத்தும். எனவே இனி உங்கள் மதிய உணவில் 50 % காய்கறிகள், 25 % புரதம் மற்றும் 25 % கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்" என்று அவர் அறிவுறுத்துகிறார்.

மேலும், உணவின் அளவை குறைக்கும் போது, நீங்கள் இரண்டு ரொட்டிகளையும், ½ கிண்ணம் அரிசியையும் சாப்பிடலாம். சில வல்லுநர்கள் வெள்ளை நிற அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசிக்கு மாற பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது மெதுவாக ஆற்றலை வெளியிடுகிறது மற்றும் உங்களுக்கு அதிக மயக்கத்தை ஏற்படுத்தாது.







No comments:

Post a Comment