Showing posts with label கள்ளநோட்டு. Show all posts
Showing posts with label கள்ளநோட்டு. Show all posts

Tuesday, October 26, 2021

தீபாவளி செலவுக்கு YouTube பார்த்து கலர் ஜெராக்ஸ் மிசினில் கள்ளநோட்டு அடித்த தம்பிகள்..!

YouTube பார்த்து கலர் ஜெராக்ஸ் மிசினில் கள்ளநோட்டு.. சேலத்தில் பகீர்- காரணத்தை கேட்டா மயங்கிடுவீங்க

சேலம்: சேலத்தில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் கள்ளநோட்டு அடித்த கும்பல் ஒன்று போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளது.

இப்போதெல்லாம் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் மக்கள் நேரடியாக செல்வது யூ டியூப்தான். பாடல், படம் பார்ப்பது தவிர்த்து பலநூறு விஷயங்களை யூ டியூபில் கற்றுக்கொள்ள முடியும். சமையல் வீடியோ, போட்டோகிராபி பயிற்சி தொடங்கி ஹேக்கிங் செய்வது வரை எல்லாமே யூ டியூபில் இருக்கிறது.

பல நல்ல விஷயங்கள் இருக்கும் யூ டியூபை பார்த்து மோசமான விஷயங்களை கூட சிலர் கற்றுக்கொள்வது உண்டு. அப்படித்தான் சேலத்தில் ஒரு கும்பல் யூ டியூப் பார்த்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கி உள்ளனர்.
தீபாவளி

தீபாவளியை முன்னிட்டு போலீசார் பொது இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று சேலம் அருகே தப்பக்குட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்த போது அங்கு கையில் பெரிய பையுடன் ஒரு நபர் அங்கும், இங்கும் நடந்து சென்றதை போலீசார் கவனித்து உள்ளனர்.

விசாரணை

ஆள் கொஞ்சம் மார்க்கமாக இருந்ததால் அழைத்து பையில் என்ன என்று விசாரித்துள்ளனர். அவரிடம் சோதனை செய்ததில், பை முழுக்க கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. ஒரு கட்டு பணத்தை எடுத்து பார்த்த போலீசார் அதிர்ச்சி போய் இருக்கிறார். காரணம்.. மொத்தமும் கள்ள நோட்டு . அதுவும் மோசமான தரத்தில் அடிக்கப்பட்ட கள்ள நோட்டு. பணத்தை எண்ணிப்பார்த்தால் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 160 உட்பட 200, 100 என்று கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது.

மதிப்பு

1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அந்த பையில் இருந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார்.. தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நபரின் பெயர் பொன்னுவேல் என்று தெரிய வந்தது. இவரும், இவரின் ஊரை சேர்ந்த சதீஷ், சின்னத்தம்பி என்ற நபரும் சேர்ந்து இந்த கள்ள நோட்டுகளை அடித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

காசு இல்லை

அதன்படி தீபாவளி செலவிற்கு எங்களிடம் காசு இல்லை. இதனால் நாங்கள் கள்ள நோட்டு அடித்தோம். வீட்டிலேயே இந்த நோட்டுகளை அடித்தோம். யூ டியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் இந்த நோட்டுகளை அடித்து கைமாற்ற நினைத்தோம். பொதுவாக தீபாவளி நேரத்தில் கடைகளில் கூட்டமாக இருக்கும். பணம் கொடுத்தால் அதை சரியாக கவனிக்க மாட்டார்கள்.

காரணம் என்ன

அப்போது நல்ல நோட்டுடன் இடையில் வைத்து இந்த கள்ள நோட்டுகளை கொடுத்தால் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். இதை கூட்டம் அதிகம் உள்ள கடையில் மாற்றி ஏமாற்றலாம் என்று நினைத்தோம். தீபாவளி செலவிற்காக இப்படி கள்ள நோட்டு அடித்தோம் என்று பொன்னுவேல் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த சதீஷ், சின்னத்தம்பியையும் கைது செய்தனர்.