Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts

Thursday, November 25, 2021

அண்ணே.. இது உண்மையா..?

2 நாட்களுக்கு முன்பு கடலூரில் தீபன் படத்திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விழாவில் அவர் பேசியதாக சில செய்திகள் சோஷியல் மீடியாவில் பரவின.

அதில், "என்னிடம் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி உங்களுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது? எப்படி சாப்பிடுகிறாய் என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தான் செலவு செய்கிறேன், எனக்கு வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாக பணம் வருகிறது என்றும் கூறுகிறார்கள்..


வருவாய்

எனக்கு கோடி கோடியாய் பணம் வருதுன்னு சொல்றாங்க..? வருதுன்னு சொல்லுறீங்க... அப்ப உங்களுக்கு எங்கேயிருந்து வருதுன்னு சொல்லுங்க. அதை பத்தி புலனாய்வு பண்ணுங்க.. மற்றவர்கள் எல்லாம் இவ்வளவு பெரிய வீடுகளைக் கட்டி வாழ்கிறார்கள். ஆனால் எனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை, உண்மையில் எனக்கு வீடு இல்லை.. இந்த நாட்டையே அடைய துடிக்கும் எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம்?

கோழிகள், புறா

அடுத்த மாதம் காலி பண்ணணும். என் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்க போவது? நானும் என் மனைவியும்னா பராவல்ல. நாங்க பாட்டுக்கு ஒரு சின்ன குடிசையில் எங்கேயாவது இருந்திட்டு போவோம். ஆனா என் பிள்ளைகள், அந்த வாத்து, கோழிகள், புறா இதை எங்க கொண்டு போய் போடுறது? எந்த வீட்டில் கொண்டு போய் வச்சாலும் வீடு தரமாட்டான் தெரியுமா?" என்று ஆதங்கத்துடன் சீமான் கேள்விகளை கேட்டிருந்ததாகவும் செய்திகள் பரவின.

கவலை

மேலும், சீமான் பேசியதாக கூறப்பட்ட அந்த தகவல்கள் அத்தனையும் சோஷியல் மீடியாவிலும் வைரலானது.. இதை அடிப்படையாக வைத்து பலரும், உண்மையிலேயே சீமானுக்கு வீடு இல்லையா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர்.. மேலும் சிலர், சென்னை வளசரவாக்கத்தில் அவர் வாடகைக்கு இருக்கும் பிரமாண்ட வீட்டினை காட்டி, இதுதான் சீமான் வசிக்கும் எளிமையான வீடு என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆதாரங்கள்

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்று இது தொடர்பான ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. ஒரு நிலத்தின் விவரங்களை குறிப்பிட்டு, சில ஆதாரங்களையும் அது தெரிவித்திருந்தது.. "அதிபரே, கொடைக்கானல்ல இருக்குற இந்த 6 ஏக்கர் நிலத்தை வித்து, சென்னையில வீடு வாங்கிக்கலாமே... எதுக்கு பிச்சை எடுக்குறீங்க? நல்ல விலைதான் போகுது வித்துட்டு வீடு வாங்குங்க. 2.43 ஹெக்டேராம், அப்படியென்றால் 6 acre. 6 acre = 2, 61, 360 சதுர அடி. ஒரு சதுர அடி இன்று 115 ரூபாய் என்றால் இடத்தின் சந்தை மதிப்பு 3கோடியே 36 லட்சம்" என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

பதிவு

இதையடுத்து, இந்த செய்தி சோஷியல் மீடியாவில் வைரலானது.. இது குறித்துதான், விசிகவின் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சீமானுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் இருக்கும் நிலம்..'' - ஆதாரத்துடன் அம்பலம்" என்ற செய்தியை பகிர்ந்துள்ளார்.. அத்துடன் "இது உண்மையாண்ணே" என்றும் சீமானிடம் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

ட்வீட்டர்வாசிகள்

இதற்கு ட்விட்டர்வாசிகள் பலரும் திரண்டு வந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "ஏன் ஒரு முன்னாள் அமைச்சரின் மகளுக்கு நிலம் இருக்கக்கூடாதா? என்றும் சீமான் பெயரை சொன்னாலே சும்மா அறிவாலயமே அதிருது இல்லை என்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன...


Thursday, November 18, 2021

சீமான் vs வன்னி அரசு-



சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், உலகத்துக்கே தெரியும் அக்னி கலசம் என்பது வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது. அதை ஏன் ஜெய்பீம் படத்தில் வைக்க வேண்டும்? தவிர்த்திருக்கலாம். உண்மை பாத்திரங்களான அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் பயன்படுத்தவில்லை? கோவிந்தன் ஏன் இடம்பெறவில்லை.. வன்னியர்களின் வலி நியாயமானது என கூறியிருந்தார்.



 சீமானின் இரட்டை நிலை

அதேபேட்டியில், தம்பி நடிகர் சூர்யா உதைப்பேன் என்று சொல்வதெல்லாம் அநாகரிகமானது. அப்படி பதிவிட்ட நபரை வேண்டுமானால் உதைங்க.. நான் காசு தருகிறேன் என்று எள்ளலாகவும் சீமான் கூறினார். மேலும் ஜெய்பீம் மிகச் சிறந்த திரைப்படம். அது வெற்றிகரமாக ஓடிவிட்டது. அதனால் பிரச்சனை முடிந்துவிட்டது எனவும் கூறியிருந்தார். அதாவது ஜெய்பீம் படக் குழுவுக்கு ஆதரவாகவும் வன்னியர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும் சீமான் கருத்து தெரிவித்திருந்தார்.

விவாதப் பொருள்

சீமானின் இந்த கருத்து இப்போது சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ளது. சீமான், இருதரப்புக்கும் இணக்கமாக பேசுவதை விமர்சிக்கிற குரல்கள் அதிகம் இருக்கின்றன. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு இப்போது சீமானுடன் மல்லுக்கட்ட தொடங்க உள்ளார்.

 வன்னி அரசு கேள்வி

இது தொடர்பாக வன்னி அரசு பதிவிட்டதாவது: திரெளபதி,ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச்சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? அரசபயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு படைப்பை சாதிரீதியாக முடக்க துடிக்கும் பாமகவோடு நிற்பது சரியாண்ணே? என கேள்வி எழுப்பியுள்ளார் வன்னி அரசு. வன்னி அரசுவின் இந்த பதிவின் மூலம் விசிகவினர் சீமானுக்கு எதிராக பொங்கி வருகின்றனர்.

அன்று ஏன் மவுனம்?

அதாவது வன்னி அரசுவின் இந்த பதிவிலேயே, முத்திரைக்கே பொங்குறீரே சீமான். நாங்கள் மிகவும் பாசமும் மரியாதையும் கொண்டுள்ள எங்கள் தலைவரை சித்தரித்து பேசும் போது ஏன் மவுனம் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.


Monday, September 20, 2021

இந்துத்துவ வாதியாக மாறுகிறாரா சீமான்..?


பெரியார் பேரன்... மார்க்ஸின் மாணவன் என்ற முழக்கத்துடன் தமிழக மேடைகளில் அறிமுகமானவர் சீமான். பின்னர் நாம் தமிழர் கட்சி தொடங்கி முப்பாட்டன் முருகன், மாயோன், கொற்றவை வழிபாடு, தேர்தலில் தனித்துப் போட்டி என வித்தியாசமான அரசியல் பாதையில் பயணித்து வருகிறார். தாம் முன்வைப்பதுதான் உண்மையான தமிழ்த் தேசியம் என முழங்கும் சீமானின் பாதை தெள்ளத்தெளிவாக இந்துத்துவாவை நோக்கியதாக இருப்பதை இந்து அமைப்புகளின் தலைவர்களான அர்ஜூன் சம்பத், ராம ரவிக்குமார் போன்றோரின் பேட்டிகளே வெளிப்படுத்தி இருக்கின்றன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

திரைப்பட இயக்குநராக இருந்த சீமானுக்கு அரசியல் மேடைகள் கொடுத்தவை திராவிடர் இயக்கம். திராவிடர் இயக்க மேடைகளில் நரம்பு புடைக்க நாத்திகம் பேசியவர். தந்தை பெரியாரை தமது தலைவராக ஏற்றுக் கொண்டு முழக்கமிட்டவர் சீமான்.

திராவிடர் இயக்க மேடைகளில் இடைவிடாமல் இடிமுழக்கமாக பேசிய ஒற்றை காரணத்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி சென்றார். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் எத்தனையோ தலைவர்கள், பிரமுகர்கள் இப்படி விடுதலைப் புலிகளாள் அழைக்கப்பட்டது உண்டு. அவர்களில் ஒருவர்தான் சீமான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு பேச்சுக்காக, நடவடிக்கைகளுக்காக எத்தனையோ பேர் சிறைவாசம் அனுபவித்தவர்கள் உண்டு. அப்படி சிறைவாசம் அனுபவித்த பின்னர் வெளியேறிய சிலர் தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை வெகுதீவிரமாக பேசுவது வழக்கமானதுதான். ஆனால் இப்படியான திடீர் தமிழ்த் தேசியர்களின் பின்புலத்தை காலம் காலமாக தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் சந்தேகிப்பதும் வழக்கமானதுதான். 2009 ஈழ இறுதி யுத்தத்துக்குப் பின்னர் சீமான் தனித்த பாதையில் பயணிக்க தொடங்கினார்.

சி.பா.ஆதித்தனாருக்கு சொந்தமான நாம் தமிழர் கட்சியின் பெயரை பெற்று தனிக் கட்சி நடத்தி வருகிறார் சீமான். அவரது ஆவேசமான பேச்சுகள் கணிசமாக இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. சீமான் பேசுவது அத்தனையும் நிஜம் என நம்பும் அந்த இளைஞர்கள், அவர் பேசுவதுதான் உண்மையான தமிழ்த் தேசியம் எனவும் ஏற்றுக் கொள்கின்றனர். இதே தமிழகத்தில் ம.பொ.சி. உள்ளிட்ட பலரும் இப்படியான தமிழ்த் தேசியம் பேசியும் அது எடுபடாமல் போனது என்கிற வரலாறும் இந்த மண்ணில் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, திராவிடமும் ஆரியமும் கள்ளக் குழந்தைகள்; இரண்டையும் ஒரே நேரத்தில் வீழ்த்தும் வல்லமை தங்களுக்கே உண்டு என்றுதான் பேசி வருகிறார் சீமான். திராவிடத்தின் மீதான உச்சவெறுப்பாக தெரிந்தோ தெரியாமலோ ஆரியத்தின் குரலாகவே சீமான் உருமாறி நிற்கிறார் என்கிற விமர்சனம் வைக்கப்படுகிறது. பெரியாருக்கு தமிழகத்தில் ஏற்கனவே தேவைக்கு அதிகமாகவே சிலை இருக்கிறதே.. இப்ப எதுக்கு சிலை என்ற சீமானின் பேச்சு இந்துத்துவ சித்தாந்தவாதிகளின் அப்பட்டமான குரல்தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது. 
ஆனாலும் சீமான் சொல்வார், நான் இந்து அல்ல; இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்க மாட்டோம் என்று.

சமீபத்தில் சீமான், பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில் சிக்கிய பாஜகவின் கே.டி.ராகவனுக்கு பகிரங்கமான ஆதரவை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சி அடையவும் வைத்தார். அண்மையில் திராவிடத்துக்கு எதிராக சீமான் தரப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துகள் அனைத்தும் தாங்கள் பேசியதுதான்.. எங்களைப் போலத்தான் சீமான் பேசுகிறார் என பகிரங்கமாக சொன்னார் தீவிர இந்துத்துவவாதியான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். அதேபோல சீமானுக்கு முழு ஆதரவு தருகிறோம் என்கிறார் மற்றொரு வலதுசாரியான ராம ரவிக்குமார்.

தமிழினத்துக்காகப் பாடுபட்ட எத்தனையோ தலைவர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறார் சீமான். தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என அறிவித்து ஜாதி ஒழிப்புக்கான உறுதி மொழி பிரகடனத்தையும் வெளியிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பட்டி தொட்டி எங்கும் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்த ஆண்டு. ஆனால் வலதுசாரிகளைப் போல அண்ணா, பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகளை சீமான் புறக்கணிக்கிறார்.

திராவிடத்தையும் ஆரியத்தையும் சமமாக எதிர்க்கிறோம்; திமுகவையும் பாஜகவையும் கடுமையாக எதிர்க்கிறோம் என்பது சீமான் சொல்லும் நிலைப்பாடு. ஆனால் நிஜத்தில் ஆரியத்தின் குரலாக, பாஜகவின் ஆதரவு குரலாக, வலதுசாரிகளின் பேரன்பும் பேராதராவுடனும் சீமான் இருக்கிறார் என்கிற விமர்சனம் வலுவாக வைக்கப்படுகிறது.. அவர் செல்லும் பாதை தமிழ்த் தேசிய பாதையாக இல்லாமல் இந்துத்துவ பாதையாகவே வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அடுத்தடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிவரும் சீமான், நாத்திகம், திராவிடம் பெரியார் என ஆரம்பித்து நாத்திகம் தவிர்ப்பு, ஆன்மீகம், தமிழ் தேசியம் என மாறியதும், பெண்கள் குறித்தான பார்வையும், பாலியல் விவகாரங்களில் அவரது அணுகுமுறை, பாஜகவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க ஆதரவு, 

தற்போது தமிழ் தேசியம் என்பதைத்தாண்டி தீவிர திமுக எதிர்ப்பிலிருந்து தீவிர திராவிட எதிர்ப்பை நோக்கிய அவரது அடுத்தக்கட்ட நகர்வு எங்களை நோக்கித்தான் வரும், அவர் விரைவில் எங்கள் தாய் மதத்துக்கும் திரும்புவார் என்ற அர்ஜுன் சம்பத்தின் பேட்டியையும் மறுப்பதற்கில்லை என்பதாகவே அவரது நகர்வுகள் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்வதையும் நாம் மறுப்பதற்கில்லை.