Saturday, September 25, 2021

கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் - தாலிபான்கள் மிரட்டல்

 

   

கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என்று தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் அங்கு தற்காலிக அரசையும் அமைத்துள்ளனர். ஆனால் இன்னனும், தலிபான் அரசு பதவி ஏற்கவில்லை. தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி. இவர் அண்மையில் தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

கை, கால்களைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும். நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. என்ன மாதிரியான தண்டனைகள் எல்லாம் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனைகள் வழங்குகிறோம். கைகளைத் துண்டிப்பது பற்றி பல்வேறு விமர்சனங்களும் நிலவுகின்றன. ஆனால், கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார். ஆப்கன் மக்கள் மத்தியில் ஊழல் மலிந்துள்ளது. பணத்தை அபகரிப்பது போன்ற பழக்கமும் உருவாகி உள்ளது.

எங்கள் தண்டனை முறை அமைதியையும், நிலையான தன்மையையும் கொண்டு வரும். நாங்கள் எங்கள் சட்டத்திட்டங்களை அமல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது. எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டத்திட்டங்களை வகுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தலிபான்களின் தண்டணை முறை

தலிபான்கள் தங்களின் முந்தைய ஆட்சியின் போது குற்றவாளிகளுக்கு காபூல் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் தான் தண்டனைகளை நிறைவேற்றுவார்கள். கொலைக் குற்றவாளிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்கள். பொதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களே இந்தத் தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியிடமிருந்து பிளட் மனி என்றழைக்கப்படும் குற்றத்துக்கு இழப்பீடாக பெருந்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டால் கையை வெட்டுவார்கள். நெடுஞ்சாலையில் திருட்டில் ஈடுபட்டால் கால் துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment