Saturday, November 20, 2021

இந்தியா உடைந்து சிதறும்..?


இமாசலப் பிரதேசத்தின் சிம்லாவின் நேற்று 82-வது சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார்.

இந்த உரையில், ஒரே நாடு- ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை என்பதை பிரதமர் மோடி முன்மொழிந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.




பன்முகத்தன்மை கொண்ட நாடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இமாச்சலப்பிரதேச மாநில சிம்லாவில் நேற்று சட்டப்பேரவைத் தலைவர்களின் 82 ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார். பிரதமர் தனது உரையில்,சட்டமன்றங்களின் மாண்புகளை காப்பாற்றும் கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது என்பதையும், நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஒரே நாடு; ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை

அதே உரையில்," வளங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரே நாடு; ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை" என்ற கருத்தை தாம் முன்வைப்பதாக தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடி அவர்களின் இந்த கருத்து, ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா கட்சியின் ஒரே நாடு! ஒரே மதம்! ஒரே மொழி! ஒரே பண்பாடு! எனும் கோட்பாட்டின் நீட்சியாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிப்பதற்கு, 1953 ஆம் ஆண்டு டிசம்பரில் ,பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பசல் அலி தலைமையில் எச்.என்.குன்ஸ்சுரு, கே.எம்..பணிக்கர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைத்தார். இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப் பட வேண்டும் என்று பசல் அலி ஆணையம் 1955,செப்டம்பரில் தனது பரிந்துரை அறிக்கையை அளித்தது.

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா

அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர், இந்தியா எனபது ஒரே நாடு; இதனை நிர்வாக வசதிக்காக நாட்டை நூறு பகுதிகளாக பிரிக்க வேண்டும். டெல்லியில் மையப்படுத்த ஒரே அரசுதான் இருக்க வேண்டும் என்று மொழிவாரி மாநிலப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார். ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளை நிறைவேற்றி வரும் பா.ஜ.க அரசு,"ஒரே நாடு; ஒரே நாடாளுமன்றம்" என்ற திட்டத்தை செயற்படுத்த முனைந்து இருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை பிரதமரின் உரை ஏற்படுத்துகிறது.


இந்தியா உடைந்து சிதறிவிடும்

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் முக்கியமான காலகட்டம் என்று பிரதமர் குறிப்பிட்டு இருப்பது உண்மைதான். நாட்டின் பன்முகத்தன்மை தகர்க்கப்பட்டு பல்வேறு தேசிய இனங்களின் தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்பட்டால் 2047 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா நூறாவது ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடும் போது இந்தியா உடைந்து சிதறி விடும்..அதற்கு வழிவகுத்து விடாமல் இந்தியாவின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் மாநிலங்களின் உரிமைகளை பேணவும் பா.ஜ.க அரசு புரிதலுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.














No comments:

Post a Comment