Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Wednesday, December 1, 2021

மாதம் 300 ரூபாய்க்கு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்தேன்..!

தொல்.திருமாவளவன்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திரு.தொல். திருமாவளவனை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

தன் கல்லூரி நாட்கள், தொடக்ககால அரசியல் ஈடுபாடு, முதல் வேலை, அரசு பணியில் சேர்ந்த அனுபவம் என பலவற்றை குறித்தும் சுவாரஸ்யமாக அமைந்தது அந்த உரையாடல். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் இருந்து வந்துள்ள நீங்கள் தவிர்க்கமுடியாத சூழலால் அரசியலுக்கு வந்துள்ளீர்கள். அதற்கான தேவை இருந்தது என்று நினைக்கிறீர்களா ?

சென்னை மாநிலக் கல்லூரியில் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. இங்கு வந்த பிறகு சென்னை சூழல்தான் எனக்கு அரசியல் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. இந்நகரத்திற்கு வராமல் இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருப்பேனா என தெரியவில்லை. இங்கு விடுதியில் தங்கிய நாட்களில் உடன் இருந்தவர்களுடன் அரசியல் பற்றியே பெரும்பாலும் விவாதிப்போம். அதிலும் குறிப்பாக திராவிட அரசியல். மேலும் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் அனைத்து அரசியல் கூட்டங்கள், வாரம்தோறும் பெரியார் திடலில் நடைபெறும் கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கு தவறாமல் சென்று வருவோம்.

தீவிரமான அரசியல் ஈடுபாடு என்று சொன்னால் 1983-ம் ஆண்டு ஈழ தமிழர் பிரச்சனை நாட்களில் ஒரு கல்லூரி மாணவனாக பல போரட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டேன். மேலும் அப்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழ மக்களிடம் நான் கேட்டறிந்த கதைகள் பலவும் என்னை பதறவைத்தன. இந்த மாதிரியான சூழல்தான் என்னை அரசியல் நோக்கி நகர்த்தியது என்று நான் நினைக்கிறேன்.

கல்லூரியில் எந்த துறையில் சேர்ந்து படித்தீர்கள்?

இளங்கலையில் வேதியியல் படித்தேன். பொதுவாக அறிவியல் துறை மாணவர்கள் மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஆனால் எனக்கு கவிதை மேலும் தமிழ் மொழி மீதும் அதிக பற்றிருந்தது. தமிழ்துறை தலைவரின் வகுப்பை கவனிக்க என் துறை வகுப்பிற்கு செல்லாமல் பலமுறை இருந்ததுண்டு. எனக்கு கல்லூரியில் தமிழ் பாடம் எடுத்தவர் கவிஞர் மேத்தா.

இளங்கலை முடித்த பிறகு முதுகலை படிக்கவே நினைத்திருந்தேன். ஆனால் காலையிலிருந்து மாலை வரை ஆய்வுகூடத்திலேயே இருக்கவேண்டிவரும் என்பதாலும் அதைவிட முக்கியமாக குடும்பத்தின் வறுமை காரணமாகவும் வேலை தேட தொடங்கினேன். தெரிந்தவர் மூலம் ஜெராக்ஸ் கடை ஒன்றில் மாதம் 300 ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தேன். அதேநேரத்தில் என் கற்றலை முழுமையாக நிறுத்திவிடாமல் மாலை கல்லூரி ஒன்றில் சேர முடிவுசெய்தேன். அதன்படி ICW பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் கணக்கியல் துறை எனக்கு சரிவரவில்லை. ஜெராக்ஸ் கடை வேலையும் கடினமாக இருக்க அதையும் விட்டுவிட்டு மற்றொரு கடையில் மீண்டும் கணக்கு எழுதும் பணியில் சேர்ந்தேன்.

தொல்.திருமாவளவன்

அதையும் கொஞ்ச நாட்களில் விட்டுவிட்டு அதற்கடுத்த வருடம் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் சென்று சமூகப்பணியில் முதுகலை படிக்க விண்ணப்பித்தேன். ஆனால் அறிவியல் படித்த எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக மெட்ராஸ் பல்கலைகழகத்தில் குற்றவியல் துறையில் சேர்ந்தேன்.

அப்போது ஈழத்தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரம். அதுவரை சமூகத்தில் பார்வையாளராக மட்டுமே இருந்த நான் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கினேன். அதனால் முதலாம் ஆண்டு முழுவதும் நான் கல்லூரியும் செல்லவில்லை பருவத்தேர்வும் எழுதவில்லை. அதன்பிறகு என் பேராசிரியர் என்னை அழைத்து அறிவுறுத்த அடுத்தவருடமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன்.

தடயவியல் நிபுணராக நீங்கள் மதுரையில் பணிபுரிந்துள்ளீர்கள். அதை பற்றிய அனுபவங்களை கூறுங்கள்?

இளங்கலையில் வேதியியல் முடித்திருந்ததால் எனக்கு தடயவியல் துறையில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்திருந்தது. அப்போது நான் முதுகலை முடித்துவிட்டு சட்டம் பயின்று கொண்டிருந்தேன். வேதியியல் முடித்து பல வருடம் ஆகிவிட்டதால் எனக்கு எப்படியும் வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் நேர்காணலுக்கு மாக்சிம் கார்க்கின் தாய் புத்தகத்தை எடுத்து சென்றேன். தேர்வில் என் நிலையை பற்றி நேர்மையாக கூறி எனக்கு கேட்கப்பட்ட பொதுமான சில கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க அங்கு வந்துள்ளவர்களுள் முதல் ஆளாக தேர்வானேன். ஆனால் முதல் பணியோ கோயம்பத்தூரில். அதனால் முதல் சில மாதங்களில் நான் பணியில் சேராமல் சென்னையிலேயே இளைஞர் நிலை இயக்கம் ஒன்றில் பொதுசெயலாளராக பணியாற்றி வந்தேன். அப்போது அங்கு தலைவராக என்னுடன் பணியாற்றி வந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோவிந்தராஜ் என்னை பணியில் சேர்ந்துவிட மிகவும் வற்புறுத்தியதால் முதல் முதலாக இரயிலில் கோயம்பத்தூருக்கு பயணம் செய்தேன். பணியில் சேர்ந்து சுமார் மூன்று மாதக்காலம் இருக்கையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்பு நிகழ்கிறது. அதன்பிறகு முதல்வராகும் திருமதி.ஜானகி மதுவிலக்கு தொடர்பாக எடுத்த ஒரு கொள்கை முடிவினால் என்னை போன்ற பலருக்கும் வேலை பறிபோகிறது. ஆனால் அம்முடிவை மிகவும் சாதகமாக நினைத்து சென்னை சென்று சட்டப்படிப்பிற்கான தேர்வுகள் அனைத்தையும் முடிக்கிறேன்.

Loading video

சில மாதங்களிலேயே புதிய அரசு கவிழ்ந்துவிட எனக்கு மீண்டும் அதே வேலை கிடைக்கிறது. இம்முறை மதுரையில். சென்னையை விட்டு செல்ல எனக்கு மனமில்லாததால் வேலை குறித்து வீட்டில் சொல்லாமல் இங்கேயே இருந்துவிட்டேன். அப்போது என் தந்தைக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஒன்று ஏற்பட சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமத்திக்கப்படுகிறார். இங்குள்ள உறவினர் மூலமாக எனக்கு வேலை கிடைத்த செய்தியை அறிந்து மனம் நொந்து போகிறார் அப்பா. பின்னர் மொத்த குடும்பத்தின் வற்புறுத்தலின் பெயரில் மதுரை சென்று தடயவியல் துறையில் பணியில் சேர்கிறேன். அதன்பின் சட்டப்படிப்பை முடித்தாலும் வழக்கறிஞராக பணிசெய்யாமல் சுமார் பத்து வருடக்காலம் என் துறை ஆய்வகத்திலேயே வேலைசெய்தேன்.


Wednesday, October 6, 2021

ருத்ர தாண்டவம் : இன்னொரு சாதிய வக்கிர சினிமா..!

சமூகத்தில் சாதிப் பிரச்னையில்லை, சாதி வன் கொடுமையை எதிர்க்கும் அரசியல்தான் பிரச்னை என்ற ‘தப்பான ஆட்டமே’ இந்தத் தாண்டவம். 

காவல்துறை அதிகாரி ருத்ர பிரபாகரன், போதைப்பொருள் விற்பனை குறித்து இரு சிறுவர்களை விசாரிக்கையில் ஒரு அசம்பாவிதம் நேர்கிறது. அதன் காரணமாக ருத்ர பிரபாகரன் சிறை செல்கிறார். இதற்குக் காரணம் வன்கொடுமை தடுப்புச் சட்டமும் மதமாற்றமும்தான் என்று அரைவேக்காட்டுக் காட்சிகளால் பிரசங்கம் செய்யும் அபத்தமே படத்தின் கதை.

ருத்ர பிரபாகரனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் தேவைக்கும் குறைவாகவே நடிப்பைக் கொடுக்க, அவருக்கும் சேர்த்து நடிப்பை மிகையாக அள்ளிக் கொட்டுகிறார் ஹீரோயின் தர்ஷா. செயற்கையான உடல்மொழியுடன் பாத்திரப்படைப்பு குறித்த தெளிவின்மையும் சேர்ந்துகொள்ள கௌதம் மேனன் பார்வையாளர்களை ரொம்பவே சோதிக்கிறார்.

சுமாரான பாடல்கள், இரையும் பின்னணி இசை என ஏமாற்றுகிறார் ஜூபின். படத்தில் மிஞ்சுவது பரூக் பாஷாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு மட்டுமே. 
விசாரணையில் இருப்பவரைச் சுடுவது, குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி, குழந்தைகளைக் கடத்தி மிரட்டுவது போன்ற காவல்துறையின் அத்துமீறல்களையெல்லாம் ‘ஹீரோயிசமாக’ அடையாளப்படுத்தும் இயக்குநர், ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு அரணாக நிற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீது போலி பிம்பம் கட்டமைக்கும்போதுதான் சட்டம் மீதான அவரின் அக்கறையிலுள்ள உள்நோக்கம் வெட்டவெளிச்சமாகிறது. 

சுயமாய் முடிவுகள் எடுக்கும் பெண்களால் பிற்போக்குவாதிகள் எவ்வளவு தூரம் தாழ்வு மனப்பான்மைக்கும் அச்சுறுத்தலுக்கும் பதற்றத்திற்கும் உள்ளாகிறார்கள் என்பதற்கு படத்தில் இயக்குநர் வைத்திருக்கும் பப், மீசை, காதல் தொடர்பான காட்சிகளே சாட்சி. 
ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறைக்கு இன்றளவும் ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளாகும் நிலையில், ‘சகோதர சண்டை’ என சாதிய வன்முறைக்குப் போலிச்சாயம் பூசி அடுத்தடுத்த தலைமுறையை திசைதிருப்புவது ஆபத்தான அரசியல்.

அதற்கேற்றாற்போல் சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக சில செயற்கையான பாத்திரங்களை உருவாக்கி, தன் வன்மத்தையே வசனங்களாகப் பேசவைப்பது கலைநேர்மையற்ற செயல். அதிலும் சே குவேரா முதல் செங்கொடி வரை புகைப்படங்கள் மாட்டிய ஒரு கட்சியின் தலைவர் போதைப்பொருள் கடத்துபவர், அரசு வழக்கறிஞரையே நியமிக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டவர் என்று சித்திரிப்பது, சாதிச்சான்றிதழையெல்லாம் சாட்சியமாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது போன்ற காட்சிகள் எதார்த்தத்தை மீறிய இயக்குநரின் கற்பனைகளே.

ருத்ர பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறை, வழக்கில் துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாமல் இருப்பதும் நீதிமன்றக்காட்சிகளும் அபத்தத்தின் உச்சம். கலைநேர்த்தியையும் சமூகப்புரிதலையும் காலில் போட்டு மிதித்து வக்கிர தாண்டவமாடியிருக்கிறது படம்.

நன்றி : ஆனந்த விகடன்